சுத்த நிபாதம் 3.10

கொகாளிய சூத்திரம்—பழிச்சொல்லின் விளைவுகள்

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் எழுந்தருளியிருந்தார். அச்சமயத்தில் பகவரைக் காண அங்கு வந்த பிக்கு கொகாளியர் அவரை வணங்கி அவர் அருகில் அமர்ந்தார். பின் பிக்கு கொகாளியர் பகவரிடம்: “ஐயா, சாரிபுத்திரரும் மோகலானாரும் தீய ஆசைகள் கொண்டுள்ளனர். அவர்கள் தீய ஆசைகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்,” என்றார்.

இப்படிச் சொல்லப்பட்டவுடன் பகவர் பிக்கு கொகாளியரிடம், “இப்படிச் சொல்லாதே கொகாளிய, இப்படிச் சொல்லாதே! சாரிபுத்திரர் மோகலானார் மீதுள்ள உனது கருத்துக்களைத் தெளிவு படுத்திக் கொள், ஏனென்றால் அவர்கள் நட்புணர்வு உள்ளவர்கள்.” இரண்டாம் முறையாகக் கொகாளியர் தனது குற்றச்சாட்டைக் கூறினார். அதற்கும் பகவர் முன்கூறியதையே மீண்டும் கூறினார். மூன்றாம் முறையும் கொகாளியர் திரும்ப அக்குற்றச்சாட்டைக் கூறியபோது பகவர் அப்படிக் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பின் பிக்கு கொகாளியர் எழுந்து, பகவரை வணங்கி அவரை வலப்புறமாகச் சுற்றி வந்து, அவரிடம் விடை பெற்றார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே, கொகாளியர் உடல் முழுவதும் கடுகளவு கொப்புளங்கள் தோன்றின. பின் அவை பாசிப் பருப்பின் அளவும், கடலைப் பருப்பின் அளவும், இலந்தைக் கொட்டை அளவும், இலந்தைப் பழத்தின் அளவும், கடுக்காய் அளவும், பச்சை வில்வம், முதிர்ந்த வில்வப் பழத்தின் அளவும் உடல் முழுவதும் பெரிதாகின. பிறகு, இரத்தமும் சீழும் அவற்றிலிருந்து சொரியக் கொகாளியர் மாண்டு போனார். இறந்த பின் சாரிபுத்திரர், மோகலானார் மீது தனது உள்ளம் இறுகி விட்டப்படியால் அவர் பதும நரகத்தில் தோன்றினார்.

பின் இரவு கடந்து செல்ல, ஜேத வனத்தை வெளிச்சப்படுத்துமளவு பெரும் பிரகாசமான பிரம்ம சஹாம்பதி (தேவர்களின் தலைவர்) பகவரிடம் வந்து அவரை வணங்கி அவர் அருகில் அமர்ந்து: “போற்றுதற்குரியவரே, பிக்கு கொகாளியர் இறந்து மறுமையில் சாரிபுத்திரர் மோகலானார் மீது தனது உள்ளம் இறுகி விட்டப்படியால், பதும நரகத்தில் தோன்றியுள்ளார்,” என்றார்.

இதைக் கேட்ட ஒரு பிக்கு பகவரிடம், “எவ்வளவு காலம், ஐயா, பதும நரகத்தில் வாழ்வு நீடிக்கும்?” எனக் கேட்டார்.

“பிக்குவே, பதும நரகத்தில் வாழ்வு கண்டிப்பாக நீண்ட நாள் நீடிக்கும். சில ஆண்டுகள் அல்லது பல ஆண்டுகளாகவோ, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகவோ, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவோ, இலட்சக்கணக்கான ஆண்டுகளாகவோகூட அது நீடிக்கும். அதைக் கணக்கிட முடியாது. ”

“ஆனால் இதற்கு ஒரு உவமானம் தரமுடியுமா, ஐயா?”

“முடியும், பிக்குவே. உதாரணமாக ஒரு கோசளரின் மாட்டுவண்டியில் இருபது படி எள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து ஒரு மனிதன் நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு எள்ளை எடுக்கிறான். அந்தக் கோசளரின் மாட்டு வண்டியிலிருந்து எள், பதும நரக வாழ்நாளைவிட விரைவாகத் தீர்ந்துவிடும். மேலும் பிக்குவே, ஆபுதா நரகத்தில் இருபது வாழ்நாட்கள் நிராபுதா நரகத்தின் ஒரு வாழ்நாளாகும்....நிராபுதாவில் இருபது அபாபாவில் ஒரு வாழ்நாளாகும்....அபாபாவில் இருபது அத்தாத்தாவில் ஒரு வாழ்நாளாகும்…. அத்தாத்தாவில் இருபது அஹாஹாவில் ஒரு வாழ்நாளாகும்.... அஹாஹாவில் இருபது குமுதாவில் ஒரு வாழ்நாளாகும்.... ஒரு சோகந்திகா.. ஒரு உபாளாக...ஒரு புண்டரிகா...ஒரு பதும வாழ்நாளாகும். இந்தப் பதும நரகத்தில் தான் பிக்கு கொகாளிய சாரிபுத்திரர், மோகலானார் மீது தனது உள்ளம் இறுகி விட்டபடியால் தோன்றியுள்ளார்.

பகவர் இவ்வாறு கூறிய பின்னர் அவர் மேலும் (பா வடிவில்):

பிறக்கும் ஒவ்வொரு மனிதனின்
வாய்ச் சொற்களிலும் ஒரு கோடாரி கூடவே தோன்றுகிறது,
முட்டாள்கள் இதனைக் கொண்டு தங்களைத் தாங்களே
தீய பேச்சின் காரணமாக வெட்டிக் கொள்கின்றனர்.

அவன் குற்றம் சாட்ட வேண்டியவரைப் புகழ்கிறான்,
புகழ வேண்டியவரின் மீது குற்றம் சாட்டுகிறான்,
வாயினால் தீவினை செய்கிறான்
அதன் காரணமாக அவன் மகிழ்ச்சி காண்பதில்லை.

சூதாடுங்காய் (தாயக்கட்டை) வேண்டியவாறு விழாமையால்
தன் செல்வத்தை அழிக்கும் முட்டாள்
—தனது எல்லாச் செல்வத்தையும், ஏன் தன்னையும் கூட இழப்பவன்;
அதைவிடத் தீவினை பயப்பது
மேன்மையானோரை இழிவாக நினைத்தல்.

பழிச்சொல்லாலும் மனத்தாலும்
மேன்மையானோரை நிந்தித்தபின்,
ஒருவர் (தானாக உருவாக்கிய) நரகத்தில் கோடிக்கணக்கான யுக காலம்
கிடந்து உழல்கிறார். (அது விரைவில் முடிவுபெறாது).

வாய்மையை மறுத்தவன் நரகம் செல்கிறான்.
ஒன்றைச் செய்து விட்டுப் பின் “நான் செய்யவில்லை,”
என்பவனும் நரகம் செல்கிறான். இவ்வாறு தீவினை செய்தவர்கள்
மரணத்தின் பின் சமமானவராகின்றனர்—வேறு உலகில் (நரகத்தில்).

தீமைசெய்யாதவனுக்கு, குற்றமற்றவனுக்கு,
தூய்மையானவனுக்குத் தீங்கு செய்பவன்,
எதிர்க்காற்றில் வீசப்படும் புழுதி முகத்திலேயே அடிப்பது போலத்
தீவினைப்பயனும் அந்த முட்டாளிடமே வந்து சேரும்.

மற்றவர் பொருளுக்கு ஆசைப் படுபவன்
மற்றவரை இகழ்ந்து பேசுகிறான்—
நம்பிக்கையற்றவன், மரியாதையற்றவன்,
பொறாமையுள்ளவன், அவதூறுபேசுபவன்.

ஊத்தைவாயுடையவன், பொருந்தாப் பொய் பேசுபவன்,
இழிவானவன், துரோகி, தீயவன்,
தவறான காரியங்களைச் செய்பவன், சோரபுத்திரன்—
(அப்படிப் பட்டவன்) இங்கு அளவாகப் பேசு! இல்லாவிட்டால் நரகத்தில் வாழவேண்டி வரும்!

நல்லவரை நிந்தித்து அவர்களுக்குத்
தீமைசெய்ய மண்ணை வாரித் தூற்றுபவனே,
உலகில் பல தீமைகளைச் செய்துள்ளாய்,
காலப்போக்கில் நீ நீண்ட நாள் நரகத்திற்குச் செல்வாய்.

ஒருவர் செய்த வினை அழிக்கப் படுவதில்லை,
திரும்ப அவரிடமே வரும் அவரது எஜமானாக;
எனவே முட்டாள் எதிர்காலத்தில்
தனக்குத் தானே துயரத்தை உண்டாக்கிக் கொள்கிறான்.

(நரக வாழ்வு)
இரும்புத் தடியால் அடிக்கப்பட்டு,
கழு மரத்தில் ஏற்றப்பட்டு,
தகுந்த உணவே கிடைக்கும்—
பழுக்கக் காய்ந்த இருப்புப் பந்துகள் போல.

அங்கு உள்ளவர் மென்மையாகப் பேசுவதில்லை,
உதவி செய்யவும் எவரும் முன் வருவதில்லை.
பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் யாரும் இல்லை.
எத்திசையிலும் பற்றி எரியும் பாயே படுக்கை.

எரிகின்ற வலையில் சிக்கிக் கொள்வார்
இரும்புச் சுத்திகளால் தாக்கப் படுவார்
எல்லாப் பக்கமும் பரவும் இருட்டில்
எதையும் பார்க்க முடியாதவாறு
அழைத்துச் செல்லப் படுவார்.

பின், எரியும் இரும்பு அண்டாக்களில்
நீண்ட நேரம் அவிக்கப் படுவார்.
கொந்தளிக்கும் தீப்பிழம்புகளில்
மேலும் கீழும் குதிப்பார்.

உதிரமும் சீழும் கலந்த
நீரில் அவிக்கப் படுவார்.
எங்கு திரும்பினாலும்
எதைத் தொட்டாலும்
புழுங்கிப் போவார்.

பின் தீயவர் புழுக்கள் நிறைந்த
நீரில் சமைக்கப் படுவார்;
ஆனால் உள்வளைவு கொண்ட
பெரும் அண்டாக்களிலிருந்து தப்பிக்க முடியாது.

அடுத்து (தூரத்தில் மாந்தோப்பைப் போலத் தோன்றினாலும்)
கூர்மையான விளிம்புகளுள்ள இலைகள் கொண்ட வனத்துள் நுழைந்து
(அவ்விலைகளால்) அவர்கள் கால்கள் கிழிக்கப்படும்.
பின் நாக்கில் கொக்கி மாட்டி
இப்படியும் அப்படியும் இழுக்கப்பட்டு
வதைக்கப் படுவார்.

பின் கூர்மையான பாறைகள் கொண்ட
வேதரண்ணீ ஓடையில் –
அதைக் கடப்பது எளிதல்ல—
தீமை செய்த அந்த முட்டாள்கள்
தலைகீழாக விழுவார்கள்.

அங்கு அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்
அண்டங்காக்கைகளின் கூட்டம்
அவர்களைக் கொத்தித் தின்னும்;
நரிகளும், வேட்டை நாய்களும், பெரும் பிணந்தின்னிக் கழுகுகளும்,
பருந்துகளும், காக்கைகளும்
அவர்களைச் சூறையாடும்.

தீமை செய்பவன் வாழ்க்கை
(இதுபோன்ற) நரகவேதனை கொண்டது,
எனவே மீதமுள்ள வாழ்நாளில்
அக்கறையற்றிராமல் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்.

மெய்ஞ்ஞானம் உள்ளவர் பதும நரகத்தில்
உள்ள காலத்தை எள்ளின் தொகையையோடு ஒப்பிடுவார்.
எண்ண முடியாத ஐந்து இலட்சம் எள் மூட்டைகள். அதனோடு
மேலும் ஆயிரத்து இருநூறு இலட்சம் அதன் அருகில்.

இவ்வாறு நரகத்தின் வேதனைகளை இங்கு கூறியுள்ளோம்.
நரகத்தில் கழிக்கவேண்டிய காலத்தையும் குறிப்பிட்டுள்ளோம்.
ஆகவே மதிக்கத் தக்கவர், தூய்மையானோர்,
நட்புணர்வுள்ளோர் மீது மனத்திலும் பேச்சிலும் கவனமாக இருக்கவேண்டும்.