சுத்த நிபாதம் 4.11

கலஹவிவாத சூத்திரம்: சண்டை சச்சரவுகள்

கேள்வி:
எங்கிருந்து சண்டை சச்சரவுகள்,
புலம்பல், துயரம் ஆகியவை உருவாகின்றன?
அவற்றோடு சுயநலம், தற்பெருமை, திமிர், கோட்சொற்கள் ஆகியவையும் சேர்ந்து—
எங்கிருந்து தோன்றுகின்றன?
தயவுகூர்ந்து எங்களுக்குத் கூறுங்கள்.

புத்தர்:
நமது விருப்பத்துக்குரியவற்றிலிருந்தே
சண்டை சச்சரவுகள் தோன்றுகின்றன.
புலம்பல், துயரம் போன்றவையும்
அங்கிருந்தே தோன்றுகின்றன.
அவற்றோடு தோன்றுபவை சுயநலம், தற்பெருமை, திமிர், கோட்சொற்கள் ஆகியவை.
சண்டை சச்சரவுகள் சுயநலத்தோடு இணைந்துள்ளன. சச்சரவிலிருந்து தோன்றுவது பழிச்சொல்.

கேள்வி:
உலகில் அன்பும், பேராசையும் எழக் காரணம் என்ன?
மறுமைக்கான எதிர்பார்ப்பும், நம்பிக்கைக்குமான ஆதாரம் என்ன?

புத்தர்:
ஏக்கம் தான் உலகில் அன்புக்கும், பேராசைக்குமான காரணம்.
மறுமைக்கான எதிர்பார்ப்பும்,
நம்பிக்கைக்குமான ஆதாரமும் அதுவே.

கேள்வி:
ஏக்கத்துகான காரணம் என்ன?
நிலையான கருத்துக்கள் எங்கிருந்து தோன்றின?
துறவி (புத்தர்) குறிப்பிடும் கோபம், பொய்மை, குழப்பம் போன்ற மற்ற
பண்புகள் எங்கிருந்து தோன்றின?

புத்தர்:
உலகில் ஏக்கம் உண்டாகக் காரணம்
‘இது இன்பம், அது துன்பம்’ என்ற இருமை இருப்பதினால் தான்.
இந்த இருமை இருக்கும்போது
கோபம், பொய்மை, குழப்பம் போன்றவையும் தோன்றுகின்றன.

உருவங்கள் தோன்றுவதையும்,
மறைவதையும் காணும்போது
நிலையான கருத்துக்கள் ஏற்படுகின்றன.

குழப்பமான நிலையில் உள்ளவர்
அறிவு மார்க்கத்தில் பயில வேண்டும்.
நன்கு அறிந்த பின்னரே துறவி
இவற்றைப்பற்றிப் பேசுகிறார்.

கேள்வி:
இன்பமும், துன்பமும் தோன்றக் காரணம் என்ன?
எது இல்லாத போது இவை மறைகின்றன?
தோன்றுவதற்கும், தோன்றாததற்கும்
காரணம் என்ன என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

புத்தர்:
புலன் தொடர்பே, இன்ப துன்பங்களுக்குக் காரணம்.
புலன் தொடர்பு இல்லாவிடின் இன்ப துன்பங்களும் இருக்காது.
தோன்றுவதும் தோன்றாததும்—
அவற்றிற்கான காரணமும் புலன் தொடர்பே.

கேள்வி:
புலன் தொடர்பின் காரணம் என்ன?
வேட்கை (பற்றுள்ளம்) எதிலிருந்து உண்டாகிறது?
எது இல்லாவிட்டால், வேட்கையும் இருக்காது?
எது மறைந்த பின் புலன் தொடர்புகள் தொடர்வதை நிறுத்தும்?

புத்தர்:
புலன் தொடர்பு அரு-உரு (அருவம்—மனம், உருவம்—உடல்) சம்பந்தப்பட்டது.
ஆசையே வேட்கையின் ஆதாரம்.
ஆசை இல்லாமல் வேட்கையும் இல்லை.
உடல் பூதங்கள் மறைந்தபின் (மறுபிறப்பில்லா விட்டால்) புலன் தொடர்பும் தொடர்வதை நிறுத்தும்.

கேள்வி:
எங்கு சேர்ந்தபின் ஒருவரது உடல் பூதங்கள் மறையும்?
இன்பமும் துன்பமும் எப்போது மறையும்?
எனக்குத் தெரிவியுங்கள்.
என் உள்ளம் இவற்றின் மறைவைத் தெரிந்து கொள்ளத் துடிக்கிறது.

புத்தர்:
‘நான்’ என்ற கருத்து இல்லாதவர் (நிப்பாண நிலையை அடைந்தவர்),
தெளிந்தநிலையில் இருப்பவர்;
தெரிநிலை அழிக்கப்பட்டவராக அல்ல:
இந்த நிலைக்கு வந்தபின் அவர் பூதங்கள் மறைகின்றன (பிறப்பறுக்கிறார்).
‘நான்’ என்ற கருத்தே மனத்தின் ஆவேசத்திற்கான ஆதாரம்.

கேள்வி:
நாங்கள் கேட்டதை விளக்கிக் கூறினீர்கள்.
மற்றொரு கேள்வியும் நாங்கள் கேட்க விரும்புகிறோம், தயவு கூர்ந்து பதிலளிக்கவும்!

இவையே உச்ச நிலை (முகடு) என்று சான்றோர் கூறுகின்றனரா?
உள்ளத் தூய்மையை இந்த உலகிலேயே
காண முடியுமா?
அல்லது சான்றோர் இதனைப் பூவுலகம் அல்லாத பிற இடத்தில் காண முடியும் என்கின்றனரா?

புத்தர்:
சில சான்றோர் இதுவே உச்ச நிலை என்கின்றனர்,
உள்ளத் தூய்மையை இந்த உலகிலேயே
காண முடியும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வேறு சிலர், (ஐந்து) கந்தங்களின் முடிவின் பிறகே காண முடியும் என்கின்றனர்.

ஆராயும் முனிவர், நிபுணர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் கட்டுப்பட்டிருப்பதை உணர்வார்.
எதனோடு அவர்கள் கட்டுப்பட்டுள்ளனர் என்பதையும் அறிவார்.
இதனை அறிந்த, விடுவிக்கப்பட்ட அவர் சர்ச்சை செய்வதில்லை.
ஞானி எந்தத் தோற்றத்துக்கும் திரும்பி வருவதில்லை.