சுத்த நிபாதம் 4.8

பசுர சூத்திரம் – பசுரருக்கு

“இங்கு மட்டுமே தூய்மையுள்ளது”
—அப்படித்தான் அவர்கள் (நிபுணர்கள்) கூறுவார்கள்—
“வேறு எந்தக் கோட்பாடும் தூய்மையானது அல்ல”
இப்படியும் சொல்வார்கள்.
அவர்கள் சார்ந்திருக்கும் கோட்பாடு மட்டுமே நல்லது என்று வலியுறுத்துவார்கள்,
அவர்களுக்கென்ற தனிப்பட்ட ‘வாய்மைகளோடு’ ஆழமாகப் பற்றுக் கொண்டுள்ளவர்கள் அவர்கள்.

சச்சரவுகளை நாடியே கூட்டங்களுக்குச் செல்கின்றனர்.
மற்றவரெல்லாம் மூடர்களெனக் கருதுகின்றனர்.
வேறொருவரின் அதிகாரத்தை நம்பி,
வாக்குவாதம் செய்கின்றனர்.
புகழை நாடித் தாங்களே திறமைசாலிகளென்கின்றனர்.

சபை நடுவே விவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
—புகழை விரும்புகின்றனர்.
முடிவை எண்ணிப் பதற்றப்படுகின்றனர்—
தோல்வியுற்றால் துவண்டு விடுகின்றனர்.
குறைகூறப்பட்டால் ஆடிப் போய்விடுகின்றனர்.
இன்னொரு வாய்ப்பினை எதிர்நோக்குகின்றனர் எதிரியைத் தாக்க.

ஒருவரது விவாதம் தகர்ந்து விட்டது என்று பட்டிமன்ற நடுவர் கூறினால்
தன் கோட்பாடு மறுக்கப்பட்டு விட்ட படியால்
அவர் வருந்துகிறார், துயரப்படுகிறார்.
“அவன் என்னைத் தோற்கடித்து விட்டான்,” என்று புலம்புகிறார்.

துறவிகள் மத்தியிலும் இத்தகைய சச்சரவுகள் தோன்றியுள்ளன.
அவர்கள் மத்தியிலும்
வெற்றி பெற்றால் குதூகலமும், தோல்வியுற்றால் ஏமாற்றமும்
நிகழ்கின்றன.
இதைக் கண்டபின், சச்சரவுகளைத்
துறவிகள் தவிர்க்க வேண்டும்.
புகழ் தேடுவதைத் தவிர
அவற்றுக்கு வேறு நோக்கம் இல்லை.

சபையில்
தனது கோட்பாட்டை விளக்கியதற்காகப்
புகழப்பட்டவர்,
தான் விரும்பியது நடந்த காரணத்தால்
களிப்படைகிறார். அவர் அகந்தை பின்னும் அதிகரிக்கிறது.

ஆனால் அந்த அகந்தையே துக்கத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும் அவர் அகம்பாவத்துடனும் தற்பெருமையுடனும் பேசுகிறார்.
இதைக் கண்ணுற்றவர்கள் விவாதங்களைத்
தவிர்க்க வேண்டும்.
அவற்றால் தூய்மைபெற முடியாது என்பது சான்றோர் வாக்கு.

அரண்மனை உணவைச் சாப்பிட்ட பயில்வான்
கர்ச்சித்துக் கொண்டு திரிகிறான் தன்னோடு போட்டியிட ஒருவரைத்தேடி.
வீரனே போட்டி நடக்கும் இடம் தேடிப் போ.
இங்கு போட்டி போட எந்தச் சர்ச்சையும் இல்லை.

சர்ச்சையை உண்டாக்குவோர்,
கருத்துக்களோடு பற்றுக் கொண்டவர்
“இது மட்டுமே உண்மையானது,” என்பர்.
அவர்களிடம் சர்ச்சையிடலாம்.
ஆனால் இங்கு பிரச்சனை ஏதும் இல்லை.
பிரச்சனை எழுந்தாலும்
எதிர்க்க இங்கு எவரும் இல்லை.

எதிர்ப்பு இல்லாமல் வாழ்பவர்
ஒரு கருத்தை மற்றக் கருத்தோடு மோதவிட்டு வாதிடுவதில்லை.
எந்தக் கருத்தோடும், ‘இதுதான் மேன்மையானது,’ என்று
பற்றுக் கொள்ளாத
இங்கிருப்போர் எவருடன்
வாதிடப்போகிறாய், பசுர?

எண்ணங்களோடும், கருத்துக்கள் பற்றிய மனக்குறிப்புகளோடும்
இங்கு வந்துள்ளாய்.
தூயவரோடு ஜோடி சேர்க்கப் பட்டுள்ளாய்.
அவருக்கு முன்னால், உன்னால் அடுத்த அடி
எடுத்து வைக்க முடியாது.
(எதிர்ப்பு எழுப்ப முடியாது).